காஸாவில் சிறுநீரக நோயாளிகளின் சிகிச்சை நிலையம் தாக்கி அழிப்பு
வட காஸாவில் உள்ள ஒரே ஒரு சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை இஸ்ரேல் தாக்கி அழித்திருப்பதோடு அமெரிக்க ஆதரவு உதவி விநியோக நிலையங்களுக்கு அருகே வன்முறைகள் அதிகரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 54 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சு நேற்று (2) தெரிவித்தது.
இவர்களில் ரபாவில் உதவி விநியோக நிலையத்திற்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட 31 பேரும் அடங்குவதாக குறிப்பிட்டுள்ளது.
உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படை சூடு நடத்தியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் நிலவியதாக பார்த்தவர்கள் மற்றும் அவரச மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வடக்கு காசாவின் பெயித் லஹியாவில் அமைந்துள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான நூர் அல் காஃபி இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை இஸ்ரேலியப் படை தாக்கி அழித்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய வைத்தியசாலையின் ஓர் அங்கமாக இருக்கும் இந்த நிலையம் வட காஸாவில் உள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான ஒரே சிகிச்சை நிலையமாக இருப்பதோடு இங்கு 160இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் உயிர் காக்கும் சிகிச்சையை பெற்றுவருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முந்தைய தாக்குதல் ஒன்றில் இந்த நிலையம் சேதத்திற்கு உள்ளாகி அது திருத்தப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு சில வாரங்களிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.