ஒரு வயது குழந்தையின் மரணத்தில் மர்மம்: கொலை வழக்கு பதிவு
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஒரு வயது குழந்தை மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பொலிசார் மற்றும் கொலை வழக்குகளை விசாரிக்கும் அமைப்பும் ஒன்றிணைந்தே இந்த குழந்தை தொடர்பான வழக்கை விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 24ம் திகதி அதிகாலை கிடைத்த தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், பேச்சு மூச்சின்றி குழந்தை ஒன்றை மீட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தையின் மரணம் தொடர்பில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அந்த மர்மம் என்ன என்பதை விசாரித்து வருவதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஒரு வயதேயான குழந்தையின் இறப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஆறுதலை அளிக்க ஆவன செய்து வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் தகவல் திரட்டி வருவதாகவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சம்பவம் ஏதும் நிகழவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் இதுவரை குழந்தையின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.