தடுப்பூசி செலுத்துவதில் வளர்ந்த நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நாடு முழுதும் 18 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
ஜி - 7 எனப்படும் உலகின் வளர்ந்த நாடுகள் இணைந்து வழங்கியதை விட இது அதிகம். கொரோனா தடுப்பூசி தொடர்பாக, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த மாதம் மட்டும் 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. ஜி - 7 நாடுகள் இணைந்து, இதுவரை 10.1 கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கியுள்ளன.
தடுப்பூசி வழங்குவதில் புதிய சாதனையை எட்டியுள்ளோம். ஜி - 7 நாடுகளில் கனடா 30 லட்சம்; பிரிட்டன் 50 லட்சம்; இத்தாலி 80 லட்சம்; ஜெர்மனி 90 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தியுள்ளன.
பிரான்ஸ் 1.3 கோடி; அமெரிக்கா 2.3 கோடி ; ஜப்பான் 4 கோடி 'டோஸ்' தடுப்பூசிகள் வழங்கி உள்ளன.நம் நாட்டில் ஜன., 16ல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது. இதுவரை 68.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 16 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதே நேரத்தில் 52.3 கோடி பேர், முதல் டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.