சரணடையுங்கள்... மீண்டும் மிரட்டல் விடுத்த ரஷ்யா
ரஷ்ய துருப்புகளால் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகரில், உக்ரைன் துருப்புகளை சரணடைய ரஷ்யா மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
உயிர் பயம் இருப்பவர்கள் கண்டிப்பாக சரணடைய வேண்டும் என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளதுடன், ரஷ்ய நேரப்படி ஞாயிறு பகல் 6 மணி வரை கால அவகாசமும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறைமுக நகரமான மரியுபோலில், பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், மிகக் குறைவான எண்ணிக்கையிலான உக்ரைன் துருப்புகளே எஞ்சியுள்ளதாகவும், அவர்கள் மிக விரைவில் சரணடைவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா கூறி வந்தாலும், இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. மேலும், மரியுபோல் ரஷ்யா வசம் சிக்கியிருந்தால், பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர் ரஷ்யா கைப்பற்றும் மிகப்பெரிய நகரம் மரியுபோல் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையிலேயே, உக்ரைன் துருப்புகளுக்கும் வெளிநாட்டு வீரர்களுக்கும் ரஷ்யா கெடு விதித்துள்ளது. ரஷ்ய நேரப்படி ஞாயிறு பகல் 6 மணி வரையில் ரஷ்ய துருப்புகள் கால அவகாசம் அளித்து மிரட்டல் விடுத்துள்ளது.
ஆயுதங்களை கைவிட்டு வெளியேறும் துருப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யாவின் மிரட்டல் தொடர்பில் உக்ரைன் தரப்பு இதுவரை பதிலேதும் அளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, மரியுபோல் நிலவரம் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்றே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.