ஊரடங்கு கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்!
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால், அதிருப்தி அடைந்த மக்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கபட்டு இருந்த ஊரடங்கை கடந்த 21 ஆம் தேதி தளர்த்துவதாக இருந்தது. ஆனால், இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டதாக கூறப்படும் டெல்டா வகை புதிய கொரோனா, இங்கிலாந்திலும் கண்டறியப்பட்டது.
டெல்டா வகை கொரோனா 60 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டது எனக்கூறப்படுகிறது. இங்கிலாந்திலும் தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்தது.
குறிப்பாக நேற்று தினசரி பாதிப்பு 18 ஆயிரத்தை தாண்டியது. தொற்று பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியதும் ஊரடங்கு தளர்வுகள் மேலும் 4 வாரங்கள் ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால், அதிருப்தி அடைந்த மக்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். லண்டனின் முக்கிய வீதிகளான ஆக்ஸ்போர்டு தெரு, ஹைட் பார்க் ஆகிய பகுதிகளில் திரண்டு பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். கைகளில் கொடிகளையும், ஊரடங்குக்கு எதிரான பதாகைகளையும் வைத்திருந்தனர்.
ஊரடங்கால் தங்களால் சுதந்திரமாக எங்கும் செல்ல முடியவில்லை என ஆதங்கப்பட்ட போராட்டக்காரர்கள், உடனடியாக ஊரடங்கை திரும்பப் பெற வேண்டும் எனக்கோஷமிட்டனர். பிரதமரின் இல்லம் அமைந்துள்ள டவ்னிங் தெரு மற்றும் பாராளுமன்றத்தை நோக்கி டென்னிஸ் பந்துகளையும் போராட்டக்காரர்கள் வீசினர்.