பிரெஞ்சு ஜனாதிபதி பெரும்பான்மையை இழந்தார்
பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மெக்ரோன் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளார்.
இன்றைய தினம் வெளியிடப்பட்ட நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பிரான்ஸில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஏனைய கட்சிகளுடன் கூட்டணி சேரா விட்டால் ஜனாதிபதியினால் ஆட்சியை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரான்ஸ் நாடாளுமன்றில் மொத்தமாக 577 ஆசனங்கள் காணப்படுவதாகவும் இதில் ஜனாதிபதி மெக்ரோனின் கட்சிக்கு மொத்தமாக 245 ஆசனங்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதல் ஆசனங்களை பெற்றுக் கொண்ட தனிக் கட்சியாக ஜனாதிபதியின் கட்சி காணப்பட்டாலும், பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 289 ஆசனங்கள் தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் மெக்ரோன் தலைமையிலான அரசாங்கம் வேறும் கட்சிகளின் ஒத்துழைப்பினை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இவ்வாறான ஓர் நெருக்கடி நிலைமை உருவாகும் என பல்வேறு அமைச்சர்களும் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.
பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலைமை நீடித்தால் மீளவும் இடைத்தேர்தல் ஒன்றை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஜனாதிபதிக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.