மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்
கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி அண்ட்ரே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம், ஜனாதிபதி ரஜோலினா தலைமையிலான அரசுக்கு எதிராகத் திரும்பியது.
போராட்டத்தில் பொதுமக்கள்
பொதுமக்கள் ஊழல், வறுமை, மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, அந்நாட்டு இராணுவத்தின் முக்கியமான படைப்பிரிவான கெப்செட் (CAPSAT), ஜனாதிபதியின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராகத் திரும்பியது.
இது அந்நாட்டு ஜனாதிபதிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி ரஜோலினா பிரான்ஸ் நாட்டின் இராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி, தப்பியோடியதைத் தொடர்ந்து, இராணுவத்தின் கெப்செட் படைப்பிரிவு நாட்டின் பல்வேறு முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மடகஸ்கார் முன்னர் பிரான்ஸின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்னரும், பிரான்ஸ் தனது படைவீரர்களை அங்கு நிலைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.