மாலியில் இராணுவ நடவடிக்கையால் பதற்றம்..அமெரிக்கா மக்களுக்கு எச்சரிக்கை
மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமர் கைது நடவடிக்கையால் தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் கடந்த ஆகஸ்டில் ராணுவம், ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் ஈடுபட்டது. இதன் எதிரொலியாக அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். இதனால், அந்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது. மாலியின் அதிபராக பா டாவ் இருந்து வருகிறார்.
பிரதமராக மொக்தார் உவானே பதவி வகிக்கிறார். இந்நிலையில், நேற்று (திங்கட் கிழமை) அமைச்சரவை மறுசீரமைப்பு நடந்தது. இதில், ராணுவ உறுப்பினர்கள் 2 பேர் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறு இருவர் நியமிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிரடி நடவடிக்கையாக அதிபர் மற்றும் பிரதமரை, அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோன்று ராணுவ மந்திரி சொலேமான் டவ்கோர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதனால், அந்நாட்டில் பதற்ற நிலை காணப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிமக்கள் ஆட்சியை கொண்டு வர தற்காலிக அரசு முயற்சி செய்து வருகிறது. எனினும், முக்கிய பதவிகளை ராணுவம் கைப்பற்றி அதிகாரத்தில் இருந்து வருவது ஆளும் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
ராணுவத்தின் அதிரடி நடவடிக்கை எதிரொலியாக, அமெரிக்க தூதரக விவகார துறை தனது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதன்படி, பமாகோ (மாலி) நகரில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன என்பன போன்ற செய்திகள் அமெரிக்க தூதரகத்திற்கு வந்துள்ளன.
இந்நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி அந்த நகருக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என மக்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர். அந்நாட்டு ஊடகங்களில் வெளிவரும் இதுபற்றிய தொடர் செய்திகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்து உள்ளது.