கொங்கோவில் எபோலாவால் உயிரிழந்த இளைஞர் ; வைத்தியசாலைக்கு தீ வைத்த கும்பல்
எபோலா வைரஸால் உயிரிழந்ததாகக் கருதப்படும் இளைஞர் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்ல உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வைத்தியசாலை அனுமதிக்காத காரணத்தினால் கிழக்கு கொங்கோவில் உள்ள ருவாம்பரா பொது வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கோவில் பெரும்பாலான எபோலா நோயாளர்கள் பதிவாகியுள்ள இடூரி (Ituri) மாகாணத்தில் உள்ள புனியா (Bunia) நகரத்துக்கு அருகில் இந்த ருவாம்பரா வைத்தியசாலை அமைந்துள்ளது.

எனது மகன் எபோலாவால் இறக்கவில்லை....
வைத்தியசாலையை நோக்கி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டதால், வைத்தியசாலை ஊழியர்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்ற மோதலின்போது கற்கள் வீசப்பட்டதில் சுகாதாரப் பணியாளர் ஒருவர் காயமடைந்ததாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். தீ வைக்கப்பட்டபோது வைத்தியசாலையில் தான் கண்ட காட்சியைப் பற்றி அங்குள்ள அரசியல்வாதியான லுக் மாலெம்பே ஊடகத்திடம் தெரிவிக்கையில்,
"அவர்கள் வைத்தியசாலையை நோக்கிப் பொருட்களை வீசி எறியத் தொடங்கினர். தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த கூடாரங்களுக்கும் அவர்கள் தீ வைத்தனர்" என்றார்.
இந்த குழப்பத்துக்கு மத்தியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை கலைப்பதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். எபோலாவால் உயிரிழந்த ஒருவரின் உடல் மிகக் கடுமையான தொற்றுத் தன்மையைக் கொண்டது என்பதால், வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்குப் பாதுகாப்பான முறையில் உடல் அடக்கம் செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டியது அவசியம் என கூறப்படுகிறது.
உயிரிழந்த இளைஞர் உள்ளூர் சமூகத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபர் என்றும் அவரது மரணத்தால் அதிர்ச்சியடைந்தவர்கள், "இந்த நோயின் தீவிர நிலையைப் புரிந்துகொள்ளவில்லை" என்றும் இடூரி மாகாணத்தில் எபோலா பாதுகாப்புப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்த இளைஞர் அந்நாட்டின் கால்பந்து வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. குறித்த இளைஞரின் மரணம் தொடர்பாக அவரது தாய் கூறுகையில், எனது மகன் எபோலாவால் இறக்கவில்லை. அவர் டைபொய்ட் காய்ச்சலால் தான் இறந்தார் என்றார்.