வாகனத்துடன் எரிந்த நிலையில் ஆணின் சடலம்: வெளியான முக்கிய தகவல்
ஸ்கார்பரோவில் வாகனத்துடன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம், கொலையாக இருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் கோர்டன் முரிசன் லேன் பகுதியில் விவசாய நிலம் ஒன்றில் ஆகத்து 14ம் திகதி வாகனம் ஒன்று கொழுந்துவிட்டெரிவதை பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
பகல் 6 மணிக்கு நடந்த இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவர, உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளது அவசர உதவிக்குழுவினர். இதனிடையே ரொறன்ரோ தீயணைப்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்த நிலையில், அந்த வாகனத்தினுள் எரிந்த நிலையில் சடலம் ஒன்றை பொலிசார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுத்து வந்த ரொறன்ரோ பொலிசார், உடற்கூராய்வுக்கு பின்னர், அது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கொல்லப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.