ரொறன்ரோவில் கொலையில் முடிந்த கைக்கலப்பு: சிக்கிய ஒருவர்
ஒன்ராறியோவின் நார்த் யோர்க்கில் சனிக்கிழமை மாலை நடந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரை ரொறன்ரோ பொலிசார் கைது செய்துள்ளனர். ஷெப்பர்ட் அவென்யூ வெஸ்ட் மற்றும் ஜேன் ஸ்ட்ரீட்டில் இரவு 10 மணி அளவில் ரகளை நடப்பதாக கூறி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், கைகலப்பு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவயிடத்தில் கத்தியால் தாக்கப்பட்டு குற்றுயிரான நிலையில் பெண் ஒருவரையும் மீட்டுள்ளனர்.
இதனிடையே, குறித்த பெண் காயங்கள் காரணமாக சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணி தொடர்பில் தகவலேதும் கிடைக்கவில்லை எனவும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருவரும் அறிமுகமானவர்களா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.