கனடா வழியாக அமெரிக்காவிற்குள் இந்தியர்களைக் கடத்திய இந்திய இளைஞர்
கனடா எல்லை வழியாக இந்தியக் குடிமக்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் கடத்திய வழக்கில், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நீதித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 22 வயதான சிவம் எல்.என்.யு (Shivam Lnu) என்பவர் மீது இந்த ஆண்டு தொடக்கத்தில் 12 பேரை எல்லை கடத்தி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, அக்டோபர் 2024 முதல் ஜூன் 2025 வரையிலான காலப்பகுதியில் நியூயார்க் மாநிலத்திற்குள் மக்களைக் கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரை எல்லையில் இருந்து அழைத்துச் செல்ல ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பது சிவம் எல்.என்.யு-வின் முக்கியப் பணியாக இருந்துள்ளது.
அவ்வாறு அழைத்து வரப்படும் மக்கள் வடக்கு நியூயார்க்கில் உள்ள பாதுகாப்பான வீடுகளிலும், மொன்ட்ரியலில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளாட்ஸ்பர்க் விடுதிகளிலும் தங்க வைக்கப்பட்டனர்.
ஜனவரி 2025 இல், அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் இரண்டு வாகனங்களைச் சோதனையிட்டபோது, அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற 12 புலம்பெயர்ந்தோரைக் கண்டுபிடித்தனர்.
இந்தக் கடத்தல் மூலம் நிதி லாபம் பெற்றதையும், கடத்தலுக்குச் சதி செய்ததையும் சிவம் எல்.என்.யு ஒப்புக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டினரைச் சட்டவிரோதமாகக் கடத்தச் சதி செய்தது மற்றும் நிதி ஆதாயத்திற்காக மூன்று முறை கடத்தலில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.