தடுப்பூசி மறுப்பாளருக்கு இருதய சிகிச்சையை மறுத்த மருத்துவமனை
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மறுப்பாளருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை மறுத்துள்ளது மருத்துவமனை நிர்வாகம் ஒன்று.
குறித்த விவகாரம் தொடர்பில் அந்த நோயாளியின் தந்தை மிக உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 31 வயதான தமது மகன் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, இதுவரை இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்த தமது மகன், தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதனால் குறித்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என கவலையுடன் தெரிவித்துள்ளார் அந்த தந்தை.
தடுப்பூசி மீது தமது மகனுக்கு நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், அது அவரது கொள்கை எனவும் அதை நாம் கேள்வி கேட்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அந்த வாதத்தை ஏற்க மறுத்துள்ளதுடன், பொதுவாக எந்தவொரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கும் தடுப்பூசி என்பது கட்டாயம் எனவும், அது கொரோனா தடுப்பூசிக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற ஒரு சிக்கலான அறுவை சிகிச்சைக்கு தடுப்பூசி போட்டிருப்பது கட்டயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், உறவினர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால் ஆபத்தான கட்டத்தில் இருப்பவரை மேலும் சிக்கலில் தள்ள விரும்பவில்லை எனவும், தற்போதைய மருத்துவமனை நிர்வாகம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.