கையில் சிக்கினான்... கனடாவில் இந்திய இளைஞர் கொலையில் கோட்டைவிட்ட பொலிஸ்
கனடாவில் இந்திய இளைஞர் கொலை வழக்கு தொடர்பில் சந்தேக நபரை கைது செய்தும் பொலிசார் அவரை விடுவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் கடந்த ஞாயிறன்று 23 வயதான இந்திய இளைஞர் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் பிரப்ஜோத் சிங் கத்ரி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் விசாரணையை முன்னெடுத்த ட்ரூரோ பொலிசார் உரிய முறைப்படி தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, குறித்த கொலை வழக்கு தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக ட்ரூரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த கொலை வழக்கு தொடர்பில் எந்த குற்றவியல் நடவடிக்கையும் முன்னெடுக்காமல் அந்த நபரை பொலிசார் விடுவித்துள்ளதாகவே தற்போது தெரிய வந்துள்ளது.குறித்த தகவலை ட்ரூரோ காவல்துறை தலைவர் டேவிட் மேக்நீல் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலைக்கான நோக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல் அல்லாமல் இதுவரை தங்களுக்கு உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கொலை தொடர்பில் தேடப்படும் நபரால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தற்போதைய சூழலில் கருதவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட பிரப்ஜோத் சிங் கத்ரி Layton வாடகை டாக்ஸி சேவையில் பணியாற்றி வந்துள்ளதுடன், ஒன்றிரண்டு உணவகங்களிலும் வேலை பார்த்து வந்துள்ளார்.
கனடாவுக்கு ஒரு புதிய வாழ்க்கை தேடி வந்த இளைஞர், இனி சொந்த நாட்டுக்கு ஒரு சவப்பெட்டியில் செல்வார் என்பது உண்மையில் நெஞ்சைப் பிசைவாதாக உள்ளது என்றார் Layton வாடகை டாக்ஸி நிறுவனத்தின் தலைவர் Darlene MacDonald.