மருந்தகத்தில் பலரை பிணைக்கைதியாக்கிய இளைஞர்! பல மில்லியன் யூரோ கேட்டு அச்சுறுத்து
ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் 12 பேரை பிணைக்கைதிகளாக்கிய இளைஞர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.
தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்ற நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் நேற்று மாலை , நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த சுமார் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டுள்ளார்.
பல மில்லியன் யூரோ கேட்டு அச்சுறுத்து
அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பல மில்லியன் யூரோக்கள் கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் அந்த இளைஞருடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த இளைஞர் எதற்கும் சம்மதிப்பதாகத் தெரியவில்லை.
இதனையடுத்து இரவு 9.10 மணியளவில் பொலிஸாரின் சிறப்புப் படையினர் அதிரடியாக அந்த மருந்தகத்துக்குள் நுழைந்து 20 வயது மதிக்கத்தக்க இளைஞரை கைது செய்தனர்.
கைதான இளைஞர் ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் என பொலிஸார் கூறியுள்ள நிலையில் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை , பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டவர்களில் ஒரு பெண், கைது செய்யப்பட்ட இளைஞரின் கூட்டாளியாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அதை உறுதி செய்வதற்கான விசாரணையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.