பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்துக் கொண்டு வந்த நபர்; சீனாவை உலுக்கிய சம்பவம்
சீனாவில் பெண்ணை கொன்று, சூட்கேசில் அடைத்துக் கொண்டு வந்த நபர், கைது செய்யப்பட்டார். குறித்த நபர் டக்ஸியில் சென்றபோது சாரதிக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கிழக்கு சீனாவின் ஜியாங்சியில் உள்ள டாய்ஹே கவுண்டி காவல்துறையினரால், சந்தேக நபரான ஜி லீ, அருகிலுள்ள ஜியான் கவுண்டியில் உள்ள ஒரு குடியிருப்பில் வைத்து புதன்கிழமை கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் டாய்ஹே கவுண்டியின் டவுன்டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சூட்கேஸ் ஒன்றுடன் வந்த ஒருவர், டாக்ஸியை வாடகைக்கு அமர்த்தினார்.
தான் கொண்டு வந்த சூட்கேஸை டாக்ஸியில் ஏற்ற சிரமப்பட்ட போது, டாக்ஸி சாரதி உதவி செய்து, அதனை தூக்கி வைத்தார். வழக்கத்தைவிட சூட்கேஸ் பாரமாக இருந்தது. துர்நாற்றம் வீசியது.சூட்கேஸில் இரத்தக் கறைகளையும் கண்டார். இதனால் சந்தேகமடைந்த டாக்ஸி சாரதி, பொலிசாரை அழைத்ததை அவதானித்த பயணி தப்பியோடி விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சோதனையிட்ட போது,சூட்கேஸில் கொல்லப்பட்ட இளம்பெண்ணில் சடலத்தை கண்டனர்.
இந்நிலையில் தப்பியோடிய நபரின் அடையாளம் தெரிய வந்தது. ஜி லீ (33) என்ற அந்த நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டு, அவர் பற்றிய தகவலை வழங்குபவர்களிற்கு 30,000 யுவான் சன்மானம் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மறுநாள் புதன்கிழமை ஜி லீ கைது செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் 19 வயதானவர் என்றும், உள்ளூர் பாரில் லீ மேலாளராக பணியாற்றிய போது அந்த பெண்ணும் அங்கு பணியாற்றியதாக கூறப்படும் நிலையில் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை இந்த கொடூர சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.