அமெரிக்காவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில முன்னாள் சபாநாயகரும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் மார்க் ஹார்ட்மேன் ஆகியோரைப் படுகொலை செய்த வழக்கில், குற்றவாளியான வான்ஸ் போல்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் மேலதிகமாக 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கின் இறுதி விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், துப்பாக்கிச் சூட்டில் தப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் உணர்ச்சிப்பூர்வமாக சாட்சியளித்தனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 14 அன்று அதிகாலை 3:30 மணியளவில், பொலிஸ் அதிகாரி போல முகமூடி மற்றும் சீருடை அணிந்து வந்த குற்றவாளி போல்டர், மெலிசா ஹார்ட்மேனின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்.

கதவைத் திறந்த கணவர் மார்க்கை சுட்டு வீழ்த்திய பின், வீட்டிற்குள் புகுந்து மாடிக்கு ஓடிய நாடாளுமன்ற உறுப்பினர் மெலிசாவையும் சுட்டுக்கொன்றார்.
அவர்களின் செல்லப் பிராணியான நாயையும் அவர் விட்டுவைக்கவில்லை. இதற்கு முன்பாக, அதே இரவில் மாநில செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி யுவெட் ஆகியோரின் வீட்டிற்குச் சென்று அவர்களைச் சுட்டுப் படுகாயப்படுத்தியுள்ளார். மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் அவர் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைக்கு வழிவகுத்தது. மரண தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, குற்றவாளி போல்டர் ஜூன் மாதத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜான் ஆர். டன்ஹெய்ம் தீர்ப்பளிக்கும் போது: "எனது பல ஆண்டுகால நீதித்துறை அனுபவத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்த பிறகு நான் வழங்கும் மிக நீண்ட தண்டனை இதுவாகும்.
ஆனால் இந்தத் தண்டனை அவருக்கு மிகவும் தகுதியானது தான்" எனக் குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் சாட்சியளித்த மெலிசாவின் மகள் சோஃபி மற்றும் மகன் காலின் ஆகியோர், தங்கள் பெற்றோர் மற்றும் செல்லப் பிராணியை இழந்து வாழும் வேதனையை விவரித்து கண்ணீர் விட்டனர்.
செனட்டர் ஜான் ஹோஃப்மேன் மற்றும் அவரது மனைவி கூறுகையில், அந்த கொடூர இரவுக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டதாகவும், பாதுகாப்பிற்காக வீட்டின் கதவுகளை இரும்பால் மாற்றியிருப்பதாகவும், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே வாழ்வதாகவும் குறிப்பிட்டனர்.
அதேவேளை, வரி செலுத்தும் மக்களின் பணத்தில் குற்றவாளிக்கு ஆயுள் முழுவதும் உணவு அளிப்பதற்குப் பதிலாக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படாதது குறித்து மார்க் ஹார்ட்மேனின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டனர்.
நீதிமன்றத்தில் பேசிய குற்றவாளி போல்டர், "என்னால் இழப்பு, வலி, சோகம் மற்றும் தனிமையைச் சந்தித்த ஒவ்வொரு நபரிடமும் நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.