கனடாவை உலுக்கிய சம்பவத்தில் திருப்பம்: குப்பைகளுக்கு நடுவே கிடந்த மனித உடல் அடையாளம் தெரிந்தது
கனடாவில் குப்பைகள் மறுசுழற்சி செய்யும் ஆலை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
ஒட்டாவா பொலிசார் இது தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஒட்டாவா நகரின் தென்கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது குறிப்பிட்ட மறுசுழற்சி ஆலை. இங்கிருந்தே மனித உடல் பாகங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
தற்போது அந்த நபரை அடையாளம் கண்டுள்ளதாக ஒட்டாவா பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், விசாரணையின் துவக்க கட்டத்தில் இருப்பதால் மேலதிக தகவல்களை அடுத்துவரும் நாட்களில் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஒட்டாவா பகுதியை சேர்ந்த 58 வயதான James Macauley Teasdale என்பவரது உடல் பாகங்களே குறித்த மறுசுழற்சி ஆலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், படுகொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் குழு தற்போது இந்த வழக்கில் விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதப்படுவதாலும் இறப்புக்கான காரணத்தையும் கண்டறிய விசாரணை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.