கனடாவில் கப்பம் கோரல்களுடன் தொடர்புடைய நபர் நாடு கடத்தப்பட்டார்
கனடாவில் கப்பம் கோரல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை அந்நாட்டு அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பான விசாரணையை முன்னெடுக்க, கப்பம் கோரல் குற்றச்செயலில் சந்தேகிக்கப்படும் நபரின் பெயர் மற்றும் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
22 வயதான லவ்பீர் சிங் (Lovebir Singh) 2023 ஆம் ஆண்டு இறுதியில் கனடா வந்துள்ளார்.

இவ்வருடத்தின் ஆரம்பத்தில், அவர் “கப்பம் கோரல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம்” என உள்ளூர் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனடிய எல்லைச் சேவை முகவர் அமைப்பிற்கு தகவல் வழங்கப்பட்டு குடிவரவு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவில், சிங்கை கனடாவிலிருந்து நாடு கடத்த உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவிலிருந்து நீக்கப்பட்ட இந்த நபரின் புகைப்படத்தை வெளியிடுவதன் மூலம், அவர் கனடாவில் இருந்த காலத்தில் தொடர்பில் இருந்தவர்களையும், அவரது செயல்பாடுகளையும் பற்றி பொதுமக்களிடமிருந்து தகவல் பெற விரும்புகிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “லவ்பீர் சிங்கின் செயல்பாடுகள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களைப் பற்றிய தகவல்களை சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் முன்வர வழங்குவார்கள் என நம்புகிறோம். இது வன்முறை கப்பம் கோரல் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கக்கூடிய குற்றவியல் வலையமைப்புகளை அடையாளம் காண உதவும்” என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் உள்ளவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.