கனடாவுக்கு அடிமேல் அடி... காட்டுத்தீயைத் தொடர்ந்து உருவாகியுள்ள புதிய பிரச்சினை
கனடாவுக்கு அடிமேல் அடி விழுந்தவண்ணம் உள்ளது. ஒருபக்கம் கனேடியர்கள் காட்டுத்தீ ஏற்படுத்திய இழப்பிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கும் நிலையில், புதிதாக ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
அது, பயிர்களை கபளீகரம் செய்யும் வெட்டுக்கிளிகள்... குறிப்பாக, மனித்தோபா விவசாயிகள் ஏற்கனவே வறட்சியுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், 15 நகராட்சிகளில் உள்ள பயிர்களுக்கு வெட்டுக்கிளிகளால் ஆபத்து உருவாகியுள்ளது.
வறண்ட காலத்தில் பலுகிப்பெருகும் இந்த வெட்டுக்கிளிகள், சுமார் 85 வகை வெட்டுக்கிளிகள், புல், கோதுமை, பருப்புகள் ஆகிய பலவகை தானியவகை தாவரங்கள், எண்ணெய்வித்து தாவரங்கள் என ஒன்றையும் விடாமல் சாப்பிடக்கூடியவையாகும்.
இந்த வகை உணவு தாவரங்கள் கிடைக்காவிட்டால், என்ன தாவரம் பச்சையாக இருக்கிறதோ அதையும் ஒன்று விடாமல் காலி செய்துவிடும் இந்த வெட்டுக்கிளிகள்.
இந்த வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற போராடி வரும் விவசாயிகள் குறிப்பாக ஒரு விடயத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.
அது, மழை. ஆம், வறண்ட சூழலில் முட்டையிட்டுப் பெருகும் வெட்டுக்கிளிகளிடமிருந்து தப்ப ஒரே வழி மழைதான். தொடர் மழை மட்டுமே இந்த வெட்டுக்கிளிகளை காணாமல் போகச் செய்யும். ஆனால், மனித்தோபா மழையைப் பார்த்து கொஞ்ச காலம் ஆகிவிட்டதே!