புலம்பெயர்ந்தோர் இல்லாவிட்டால் பொருளாதாரம் பாதிக்கும்: கனேடிய மாகாணமொன்றின் கோரிக்கை
உலக நாடுகள் பலவற்றில், விரைவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.
பணி ஓய்வு பெறும் பணியாளர்களின் எண்ணிக்கையை சமன் செய்யும் அளவுக்கு இளைய தலைமுறையினர் இல்லை.
ஆகவே, அந்த இடத்தை நிரப்ப, அந்த நாடுகள் புலம்பெயர்ந்தோரை நாடும் நிலை உள்ளது. ஆனால், இந்த உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை!
இந்நிலையில், கனேடிய மாகாணமொன்றின் புலம்பெயர்தல் துறை அமைச்சர், தங்களுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று பிரதமரிடம் கோரியுள்ளார்.

மனித்தோபா மாகாண புலம்பெயர்தல் துறை அமைச்சரான மலாயா மார்செலினோ (Malaya Marcelino), புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும், பணி அனுமதிகளை நீட்டிக்கவேண்டும் என்றும் ஃபெடரல் அரசை கோரியுள்ளார்.
மனித்தோபா மாகாணத்துக்கு மாகாண நாமினி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை போதாது என்றும், புலம்பெயர்ந்தோர் இல்லாததால் தங்கள் மாகாண பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மலாயா.
இந்நிலையில், மனித்தோபா மாகாணத்தில் பணி புரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் சுமார் 6,000 பேரின் பணி அனுமதிகள் விரைவில் முடிவடைய உள்ளன.
ஆகவே, தலைநகர் சென்று பிரதமரை சந்தித்த மலாயா, அவர்களுடைய பணி அனுமதியை நீட்டிக்கவேண்டும் என்றும் மாகாண நாமினி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ஆனால், கனடா பிரதமரான மார்க் கார்னி, தனது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார் மலாயா.
மனித்தோபாவுக்கு ஒதுக்கப்படும் பணி அனுமதிகளின் எண்ணிக்கை 2023இல் 9,600ஆக இருந்தது. அதை 2025இல் பாதியாக குறைத்துவிட்டது ஃபெடரல் அரசு.
மார்க் கார்னியில் லிபரல் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அவர்கள் நாடு முழுவதும் புலம்பெயர்தலை கணிசமாக குறைத்துவருகிறார்கள் என்று கூறும் மலாயா, எங்கள் மாகாணத்திடம் கலந்தாலோசிக்காமலே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்கிறார்.

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைப்பது, மனித்தோபா மாகாணத்தின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்கிறார் மலாயா.
தான் தலைநகருக்குச் சென்று அவர்களுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் பணி அனுமதியை நீட்டிக்கவேண்டும் என்றும் மாகாண நாமினி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரியபோது, ஃபெடரல் அரசு அளித்த பதில், முடியாது, முடியாது, முடியாது என்பதே என்கிறார் மலாயா!
மனித்தோபாவுக்கு புலம்பெயர்ந்தோர் வேண்டும், வெளிநாட்டுப் பணியாளர்கள் வேண்டும், ஆகவே, எங்கள் தேவைகளை தொடர்ந்து ஃபெடரல் அரசிடம் வலியுறுத்துவோம் என்கிறார் மலாயா.