மரியுபோலில் கடுமையான பாதிப்பு: திணறும் உலக சுகாதார அமைப்பு!
ரஷ்ய துருப்புக்கள் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாக தேவைப்படும் ஜெனரேட்டர்களை கொண்டு சேர்ப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்துள்ளது.
மரியுபோலில் சுகாதார அமைப்புகள் மிகவும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அங்குள்ள மருத்துவமனைகளில் மின் விநியோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது குறைந்த நேரத்திற்கு மட்டுமே மின் விநியோகம் உள்ளது.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளின் குறைந்தபட்ச மின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த ஜெனரேட்டர்கள் உதவும்.
ஆனால், ரஷிய தாக்குதலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் அப்பகுதிக்கு, இப்போதைக்கு ஜெனரேட்டர்களை கொண்டு செல்ல முடியவில்லை.
சாதகமான நிலைமை, சற்று அணுகூலமாக அமைந்த உடனேயே, அவற்றை எடுத்து செல்ல வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ளோம் என்று செய்தித் தொடர்பாளர் பானு பட்நாகர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு செய்தித் தொடர்பாளர் பானு பட்நாகர், உக்ரைனின் பாதிப்புக்குள்ளான லீவ் நகரில் இருந்துகொண்டு, ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் காணொளி இணைப்பு மூலம் பேசினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது,
“மேற்கு நகரமான எல்விவ் தளத்தில் இருந்து, உக்ரைன் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 15 ஜெனரேட்டர்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஜெனரேட்டர்கள் கிழக்கு நகரமான கார்கிவ் நோக்கிச் செல்லவிருந்தன.
கிழக்கில் லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளுக்கு 3 ஜெனரேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இரண்டு ஜெனரேட்டர்கள் மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
எங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் போது மட்டுமே ஜெனரேட்டர்களை அவற்றின் இறுதி இடங்களுக்கு நகர்த்துவோம். இப்போதைக்கு அங்கு கொண்டு செல்ல முடியவில்லை.
நிலைமை அணுகூலமாக அமைந்த உடனேயே அவற்றை எடுத்து செல்ல வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ளோம். மரியுபோலில் மட்டும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் உள்ளனர்.
அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுவாக மருந்து மூலம் சிகிச்சையளிக்கக் கூடிய சாதாரண நோய்கள் கூட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக மாறும்" என்றார்.