கனடா – ஜப்பான் இடையே விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்து
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் ஜப்பான் பிரதமர் சென்சே தக்காசி ஆகியோர் டோக்கியோவில் புதிய விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, “நாம் ஏற்கனவே பல செயல்களை செய்து வருகிறோம். ஆனால் அதைவிட இன்னும் அதிகமாக செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்த நிகழ்வில் அவர் ஜப்பானிய மொழியிலும் சில வாக்கியங்களை பேச முயன்றார்.

முன்னர் ஜப்பானில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் இருப்பதால் அந்த மொழியில் அவருக்கு அடிப்படை அறிவு இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரது இந்த முயற்சிக்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கைதட்டி பாராட்டினர். இதேவேளை, கனடாவில் ஜப்பான் நிறுவனங்களின் வாகன உற்பத்தி முதலீடுகள் தொடர்வது, Canada-United States-Mexico Agreement (CUSMA) ஒப்பந்தத்தின் வெற்றிகரமான மறுபரிசீலனை மீது சார்ந்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை ரத்து செய்வது குறித்தும் முன்பு கருத்து வெளியிட்டிருந்தார். கனடாவுக்கான ஜப்பான் தூதர் கான்சி யமோனாச்சி கூறுகையில், அமெரிக்க சந்தைக்கான அணுகல் ஜப்பான் நிறுவனங்களின் கனடா முதலீடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார்.
கனடாவில் தயாரிக்கப்படும் கார்கள் பெரும்பாலும் அமெரிக்க சந்தைக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதனால் அந்த சந்தைக்கு அணுகல் மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்தார்.
தற்போது கனடாவில் தயாரிக்கப்படும் கார்கள் சுமார் 70 சதவீதம் ஜப்பான் நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.