திருமணமாகி 22 ஆண்டுகள்... கணவர் கனடாவில் காதல் மனைவி இந்தியாவில்: தன் பங்குக்கு பிரச்சினையை உருவாக்கியுள்ள கொரோனா
திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிய நிலையிலும், அந்த தம்பதி இணைந்திருந்த நாட்கள் மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும்.
பழைய சினிமா பாடல் ஒன்று உண்டு... அன்பே, நீ அங்கே,நான் ஒங்கே வாழ்ந்தால் இன்பம் காண்பதும் எங்கே என்று துவங்கும் அந்த பாடல்... பிரிந்திருக்கும் ஒரு காதல் தம்பதியரின் வேதனையை வெளிப்படுத்தும் அந்த பாடல்.
அதேபோல, கணவர் பரம்ஜீத் பசந்தி (Paramjit Basanti, 70) கனடாவில் வாழ்கிறார். மனைவி சரன்ஜீத் பசந்தி (Charanjit Basanti ) இந்தியாவில் வாழ்கிறார். சில சமயம் எனக்கு அழுகை வந்துவிடும் என்று கூறும் சரன்ஜீத், 22 ஆண்டு கால திருமண வாழ்க்கை, அதிலிருந்து எங்களுக்கு எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை என்கிறார்.
நான் கடுமையான மன அழுத்தத்திலிருக்கிறேன், கனடாவிலிருக்கும் அவரைக் குறித்த கவலைதான் எனக்கு எப்போதும், அவர் எப்படி சமாளிக்கிறார் என்று தெரியவில்லை என்கிறார் சரன்ஜீத்.
22 ஆண்டுகள் தொலைபேசி மூலமாகவும், எப்போதாவது விடுமுறையின்போது சந்திப்பதன் மூலமும்தான் எங்கள் திருமண வாழ்வைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறும் பரம்ஜீத், பாவம், அவள் தனியாக எப்படி சமாளிக்கிறாளோ தெரியவில்லை என்கிறார்.
இந்த காதல் தம்பதியர் இப்படி ஒருவரை ஒருவர் நினைத்துக்கொண்டே 22 ஆண்டுகளை கடத்திவிட்ட நிலையில், எப்படியாவது தன் மனைவியை கனடாவுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிடவேண்டும் என பரம்ஜீத் ஐந்து முறை எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்துவிட்டன.
2001ஆம் ஆண்டு, முதன்முறையாக மனைவிக்கு வாழிட உரிமம் கோரி பரம்ஜீத் விண்ணபித்தபோது, அவர்களது திருமணம் உண்மையானது அல்ல, கனடாவுக்கு புலம்பெயர்வதை முக்கிய காரணமாக வைத்தே அவர்கள் திருமணம் செய்துள்ளதாக கனடா அதிகாரிகள் கருதியதால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
இப்படியே ஐந்து முறை தோற்று, இப்போது இத்தனை வயதுக்குப் பிறகும் விடாமல் அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்றால், நிச்சயம் அது உண்மையான திருமணமாகத்தானே இருக்கமுடியும் என்கிறார்கள் பரம்ஜீத்தின் சட்டத்தரணிகள்.
தனது முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, கடந்த அக்டோபரில் மீண்டும் மனைவிக்கு கனடாவில் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளார் பரம்ஜீத்.
அதிலும், குறிப்பாக இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மனைவியை தனியாக விட விரும்பாத பரம்ஜீத், தற்காலிகமாவது மனைவியை கனடாவில் அனுமதிக்க உதவுவதற்காக தலையிடுமாறு புலம்பெயர்தல் துறை அமைச்சரை கோரியுள்ளார்.
இந்த மரியாதைக்குரிய காதல் ஜெயிக்குமா? பார்ப்போம்!