நீண்ட 25 ஆண்டுகள்... ரஷ்யாவை விட்டு வெளியேறும் பிரபல ஹொட்டல்
உக்ரைனில் நடந்து வரும் போருக்கு மத்தியில் ரஷ்யாவில் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்தப் போவதாக Marriott International தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பை விளாடிமிர் புடின் தொடங்கிய பின்னர், குறித்த ஹொட்டல் அதன் மாஸ்கோ அலுவலகத்தை மூடியுள்ளதுடன், மார்ச் மாதத்தில் இருந்தே ரஷ்யாவில் முதலீடுகளை நிறுத்தியுள்ளது.
இருப்பினும், ரஷ்யாவில் செயல்படும் தங்களின் 22 ஹொட்டல்களும் மூன்றாம் தரப்பினரால் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 100வது நாளை எட்டியுள்ள நிலையிலேயே Marriott International தங்கள் செயல்பட்டுகளை நிறுத்தப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாகவே தொழிலை முன்னெடுத்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக Marriott International அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ரஷ்யாவில் இருந்து மேற்கத்திய நாடுகளின் முக்கிய நிறுவனங்கள் பல வெளியேறியுள்ள நிலையில், தற்போது நீண்ட 25 ஆண்டுகளுக்கு பின்னர் Marriott International நிறுவனமும் வெளியேற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.