மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த இந்திய வம்சாவளியினர்: இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கருத்து
கனடாவில் இந்திய வம்சாவளியினர் ஒருவர் கடுமையான நெஞ்சு வலியால் துடித்த நிலையிலும், கனேடிய மருத்துவமனை ஒன்று அவரை பல மணி நேரம் காக்கவைத்துள்ளது.
பின்னர் மருத்துவர்கள் அவரை பரிசோதிக்க அழைத்துச் சென்ற சிறிது நேரத்துக்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், அவரது மரணத்துக்கு கனடா பொறுப்பேற்கவேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையும் இந்திய வம்சாவளியினருமான ப்ரஷாந்த் ஸ்ரீகுமார் (22) என்பவருக்கு, அலுவலகத்தில் பணி செய்துகொண்டிருக்கும்போது, இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 22ஆம் திகதி கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் எட்மண்டனிலுள்ள Grey Nuns Hospital என்னும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் கடுமையான நெஞ்சு வலி வந்து துடித்த நிலையிலும், எட்டு மணி நேரமாக மருத்துவமனையின் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் அமரவைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்கள் வந்து அவரை பரிசோதிக்க அழைத்துச் சென்ற சில விநாடிகளில் நெஞ்சைப் பிடித்தபடி சாய்ந்த ப்ரஷாந்த் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், ப்ரஷாந்தின் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ரந்தீர் ஜெய்ஸ்வால், உயிரிழந்த நபர் இந்திய வம்சாவளியினர் என்பதை உறுதி செய்துள்ளார்.
அத்துடன், அவர் இந்திய வம்சாவளியினராக இருந்தாலும், அவர் ஒரு கனேடிய குடிமகன், ஆகவே, கனடாதான் இந்த விடயத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜெய்ஸ்வால்.

இதற்கிடையில், ரொரன்றோ பல்கலையின் அருகில் ஷிவாங்க் அவஸ்தி என்னும் இந்திய மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று தெரிவித்துள்ளதுடன், அவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.
அவரது மரணம் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பிலிருப்பதாகவும், அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.