இரு குடும்பங்களை ஒன்றிணைத்த ஒரு போத்தலுக்குள் இருந்த செய்தி
ஒன்ராறியோவின் பாரி தீவு கடற்கரையில் வைத்து பெண் ஒருவர் கண்டெடுத்த போத்தல் ஒன்று, தற்போது இரண்டு குடும்பங்களை ஒன்றாக இணைத்துள்ளது.
பாரி தீவு கடற்கரையில் வைத்து Shandelle Carrigan என்பவருக்கு விசித்திரமான போத்தல் ஒன்று கிடைத்துள்ளது. அதை உற்றுப்பார்த்த அவருக்கு, அதில் ஒரு இளைஞரின் புகைப்படம் ஒன்று இருப்பது தெரிய வந்தது.
ஏப்ரல் 13ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், கணவரின் உதவியுடன் அந்த போத்தலை உடைத்து உள்ளே இருந்த புகைப்படம் மற்றும் தகவலை பரிசோதித்துள்ளார் Shandelle Carrigan.
அந்த போத்தலுக்குள் 10 டொலர் தாள் ஒன்றும், அத்துடன் இரங்கல் செய்தியும் இருந்துள்ளது. அதை வாசித்து மனமுடைந்த கரிகன், நடந்தது என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்பினார்.
சமூக ஊடகத்தை நாடிய அவருக்கு 24 மணி நேரத்திற்குள் விடை கிடைத்தது. குறித்த போத்தலில் இருந்த புகைப்படம் Brandon Walli என்ற இளைஞரது என தெரிய வந்தது.
பிராண்டன் கடந்த 2016-ல் சாலையில் நடந்து சென்ற போது, சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார். இளைஞர் பிராண்டன் சாலை விபத்தில் சிக்க காரணம், சம்பவத்தின் போது அவர் தமது மொபைலில் கவனம் செலுத்தியபடி சாலையில் நடந்து சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் அவர்களின் குடும்பத்தை மொத்தமாக உலுக்க, பிராண்டனின் நினைவாக Phones Down, Eyes Up என்ற விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுக்க பிராண்டனின் தந்தை Tom Walli முடிவு செய்து அதற்கான வேலைகளில் களமிறங்கினார்.
அதன் ஒருபகுதியாகவே, பிராண்டனின் புகைப்படத்துடன் இரங்கள் தகவலையும் கடலில் வீசியுள்ளனர். தற்போது கரிகன் குடும்பமும் பிராண்டனின் குடும்பமும், தொலைபேசியில் தொடர்புகொண்டு வருவதுடன், கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்ததும் சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.
மட்டுமின்றி, அந்த போத்தலையும், புகைப்படத்தையும் அந்த 10 டொலர் தொகையையும் நினைவுப்பொருளாக பாதுகாக்க கரிகன் குடும்பம் முடிவு செய்துள்ளது.
மேலும், பிராண்டனின் கவிதை ஒன்றுடன், புதிய போத்தலில் இன்னொரு 10 டொலர் தாளுடன் விரிவான தகவலுடனும் மீண்டும் கடலில் வீச இரு குடும்பமும் முடிவு செய்துள்ளார்கள்.