மியாமி கட்டட சரிவு; இதுவரை நால்வர் பலி; 159பேரை காணவில்லை!
அமெரிக்கா- புளோரிடா மாகாணத்தில் மியாமியில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு கட்டடத்தின் இடிபாடுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளதுடன் 159பேர் காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அதிகாலை 40 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் இடிந்து விழுந்தது. எனினும், கட்டம் கீழே சரிந்து வீழ்ந்தபோது எத்தனை பேர் இருந்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை. தற்போது மேலும், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், தீயணைப்பு படை மற்றும் 80 மீட்புக் குழுவினர் விரைந்து செயற்படுகின்றனர்.
குறித்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதால், அந்தக் கட்டடத்தின் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான பராமிப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், கட்டடம் இடிந்து விழுந்தபோது, கூரைகளை பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. எனினும் சுரங்கப் பள்ளங்களோ, கட்டுமானக் குறைபாட்டாலோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதேவேளை , கட்டடத்தில் நடைபெற்று வந்த கூரை சீரமைக்கும் பணிகளும் இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.