லொறிக்குள் மரணமடைந்த 53 புலம்பெயர்ந்தோர்: வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லொறிக்குள் மரணமடைந்த புலம்பெயர்ந்தோர் 8 பேர்களின் சடலங்களை மெக்சிகோ அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மொத்தம் 26 மெக்சிகோ மக்கள் மரணமடைந்த நிலையில், தற்போது அதில் 8 பேர்களின் சடலங்களை அதிகாரிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடந்த மாதம் டெக்சாஸ் மாகாணத்தில் லொறிக்குள் இருந்து 53 புலம்பெயர்ந்தோர் சடலங்களை அதிகாரிகள் மீட்டனர்.
ஆட்கடத்தல் கும்பல் ஒன்றால் கைவிடப்பட்ட நிலையில் ஜூன் 27 அன்று சான் அன்டோனியோவின் புறநகர்ப் பகுதியில் குறித்த லொறி கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தன்று அப்பகுதியில் அன்றைய வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கியிருந்தது.
இதனாலையே, அந்த லொறியில் பயணப்பட்டவர்கள் பரிதாபமாக இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், மெக்சிகோவின் வெளிவிவகார அமைச்சகம் புதன்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில்,
மரணமடைந்த மேலும் எட்டு பேரின் சடலங்களை மீட்பதற்காக இராணுவ விமானம் புதன்கிழமை சான் அன்டோனியோவுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளது.
மொத்தம் 26 மெக்சிகோ மக்கள் இறந்த நிலையில், இதுவரை 25 பேர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மெக்சிகோவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஹொண்டுராஸ் மற்றும் குவாத்தமாலாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் குறித்த லொறியில் இறந்தவர்களில் அடங்குவர் என தெரிய வந்துள்ளது.