கனடாவில் குப்பைமேட்டில் கிடைத்த ஓவியத்தால் இலட்சாதிபதியான நபர்
கனடாவில் குப்பைமேடு ஒன்றிலிருந்து கிடைத்த ஒரு ஓவியம் ஒரு பிரபலம் வரைந்தது என்பதை புரிந்துகொண்ட ஒருவர், அதை ஏலத்துக்கு கொண்டு வந்தார்.
வடக்கு ஒன்ராறியோவிலுள்ள குப்பைமேடு ஒன்றில் கிடைத்த ஒரு ஓவியத்தை, அங்கேயே 5 டொலர்களுக்கு ஒரு பெண் வாங்கியதாக ஒரு செய்தி வெளியானது.
அந்த நபர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாமல், இந்த விடயத்தை இரகசியமாக வைத்துக்கொள்ள விரும்பியதால் முதலில் அந்த ஓவியத்தை வாங்கியவர் ஒரு பெண் என்றும், அவர் அந்த ஓவியத்தை 5 டொலர்களுக்கு வாங்கியதாகவும் CBC.CA தளத்தில் செய்தி வெளியானது.
தற்போது, அந்த ஓவியத்தை வாங்கியவர் ஒரு ஆண் என்றும், அவர் அந்த ஓவியத்தை 4 டொலர்களுக்கு வாங்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவர் அந்த ஓவியத்தைக் குறித்து இணையத்தில் ஆய்வு செய்ததில், அது பிரபல பிரித்தானிய இசைக்கலைஞரான David Bowie என்பவர் வரைந்த ஓவியம் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. ஆகவே, அதை அவர் ஏல நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளார்.
அவர்கள் அது உண்மையாகவே David Bowie வரைந்ததுதானா என்பதை உறுதி செய்துகொள்ள ஒரு நிபுணரை அழைத்துள்ளார்கள். அவரும் அது உண்மையான David Bowie ஓவியம்தான் என்பதை உறுதி செய்துள்ளார். பொதுவாக இதுபோன்ற ஓவியங்கள் 9,000 முதல் 12,000 டொலர்கள் வரை விலைபோகும்.
சமீபத்தில், David Bowie வரைந்த ஓவியங்கள் 30,000 டொலர்கள் வரை விலைபோயுள்ளதால், அந்த ஓவியத்தைக் கண்டுபிடித்த அந்த நபர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
ஆனால், யாருமே எதிர்பார்க்காத அளவில், அந்த ஓவியம் தற்போது108,120 கனேடிய டொலர்களுக்கு ஏலம்போயுள்ளது. ஒரே நாளில் குப்பையில் கிடைத்த ஓவியத்தால் இலட்சாதிபதியாகிவிட்டார் அந்த நபர்!