ரொறன்ரோவில் இஸ்ரேலிய தூதரக படிக்கட்டுகளில் சிவப்பு வண்ணம் பூசிய யூத மத குரு
ரொறன்ரோவில் இஸ்ரேலிய தூதரக படிக்கட்டுகளில் சிவப்பு வண்ணம் பூசி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாக கூறி யூத மத குரு ஒருவர் மீது பொலிசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கனடாவில் உள்ள சில யூத சமூக உறுப்பினர்களும், ஆர்வலர்கள் பலரும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பகல் ரொறன்ரோவில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் படிக்கட்டில் சிவப்பு வண்ணம் பூசியுள்ளனர்.
250 மனித உயிர்களை பலிகொண்டு 11 நாட்கள் நீண்ட தாக்குதல் முடிவுக்கு வந்த வெள்ளிக்கிழமையே, படிக்கட்டுகளில் சிவப்பு வண்ணம் பூசி எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையும் சில யூதர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இந்த வன்முறை நடவடிக்கைகள் கடந்து செல்லக் கூடியவை அல்ல என யூத மத குரு David Mivasair தெரிவித்துள்ளார்.
ரொறன்ரோ தூதரகத்தில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டது, பாலஸ்தீனிய மக்களின் ரத்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலஸ்தீனியர்கள் ஆதிக்கம் மற்றும் இஸ்ரேலிய ஒடுக்குமுறையின் கீழ் வாழ்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே தூதரகத்தில் சிவப்பு வண்ணம் பூசிய புகாரில் ஹாமில்டனில் வசித்துவரும் மத குரு David Mivasair கைது செய்யப்பட்டு, பின்னர் 5,000 டொலர் பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.