ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் ; துபாய் மக்களுக்கு எச்சரிக்கை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை, அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்ததை அடுத்து, துபாய் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அணு ஆயுத குற்றச்சாட்டின் பேரில், அமெரிக்க - இஸ்ரேலிய படைகள், கடந்த பிப்ரவரி இறுதியில் போரை தொடங்கின.
இந்த போருக்கு பதிலடி தரும் வகையில் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட சரக்கு கப்பல்களின் போக்குவரத்தை முடக்கியது.

இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்தன.
இதையடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையே, கடந்த ஜூனில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது நேற்று முன்தினம் காலாவதியானது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சின் வான் பாதுகாப்பு அமைப்பு, தங்கள் நாட்டுக்கு ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதை நேற்று கண்டறிந்தது.
இதையடுத்து, துபாய் மற்றும் எமிரேட்சின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி, தேசிய அவசரநிலை மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில், துபாயில் சைரன் ஒலிகளும், பலத்த வெடிச்சத்தங்களும் கேட்டன.
ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் உறுதி செய்தது. ஈரான் ஏவிய இரு ஏவுகணைகளும் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்டன.