உள்ளாடையுடன் மாணவியை தரதரவென இழுத்துவந்து தலையில் மிதித்த பொலிசார்: நீண்ட தாமதத்துக்குப் பின் குற்றச்சாட்டு பதிவு
கனடாவில் செவிலியர் பயிற்சி பெறும் மாணவி ஒருவரை பெண் பொலிசார் ஒருவர் மிக மோசமாக நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது
கெலோனாவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் செவிலியர் பயிற்சி பெறுபவர் Mona Wang.
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், உளப்பிறட்சி பிரச்சினை கொண்ட Monaவுக்கு உதவி தேவை என அவரது ஆண் நண்பர் பொலிசாரை அழைத்துள்ளார்.
ஆனால் உதவிக்காக வந்த Const. Lacy Browning என்னும் பெண் பொலிசாரோ, தன்னை தாக்கியதாகவும் அவமதித்ததாகவும் புகாரளித்திருந்தார் Mona.
ஆனால், தான் சென்று பார்க்கும்போது, Mona குளியலறையில் விழுந்துகிடந்ததாகவும், அவர் அருகே மாத்திரை போத்தல்களும், ஒயின் போத்தல் ஒன்றும் கிடந்ததாகவும், அவர் கையில் கத்தி ஒன்றை வைத்திருந்ததாகவும், தான் Monaவை தான் வெறுங்கையால்தான் தாக்கியதாகவும், அதுவும் அவருக்கு விலங்கிடுவதற்காகத்தான் என்றும் கூறியிருந்தார் Lacy.
ஆனால், தான் பாதி நினைவுடன் குளியலறையில் கிடந்தபோது Lacy தன்னை வயிற்றில் மிதித்ததாகவும், தன் கையில் ஏறி நின்றதாகவும் தெரிவித்தார் Mona.
எனவே, அந்த கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களில் பதிவான காட்சிகளை சோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வீடியோவில் சரியான நினைவின்றி கிடக்கும் Monaவை அந்த பெண் பொலிசார் வழி முழுவதிலும் தரதரவென கையைப் பிடித்து இழுத்துவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
மேலாடை அணியாமல், வெறும் உள்ளாடை மற்றும் பேண்ட் மட்டும் அணிந்திருக்கும் Monaவை, கட்டிடத்தின் முன் பக்கத்திற்கு இழுத்துவரும் Lacy என்னும் அந்த பெண் பொலிசார், ஒரு கட்டத்தில் கீழே கிடந்த Mona மெதுவாக தலையை உயர்த்த, காலால் அவரது தலையை மிதித்து தள்ளும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளது.
பின்னர், Monaவின் தலை முடியையும் தோளையும் பிடித்து தூக்கும் அந்த பெண் பொலிசார், அவரை ஒரு அறைக்குள் இழுத்துச் செல்கிறார்.
வீடியோ காட்சிகளால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பெண் பொலிசாரான Lacyயை நிர்வாக பொறுப்புகள் துறைக்கு பணிமாற்றம் செய்துள்ளதோடு, துறை ரீதியான விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டனர்.
தற்போது கிட்டத்தட்ட ஒன்றரையாண்டுகளுக்குப் பின், Const. Lacy மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், அவர் மீது Monaவைத் தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் Kelowna நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.