இல்லாத பிள்ளைகளின் பெயரில் பெருந்தொகை ஆதாயம் பெற்ற கனேடியர்
கனடாவின் மாண்ட்ரீல் பகுதியில் குடியிருக்கும் ஒருவர் இல்லாத பிள்ளைகளின் பெயரில் பல ஆண்டு காலம் ஆதாயம் பெற்று வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் 10 ஆண்டு காலம் குறித்த நபர் குழந்தைகள் பெயரில் ஆதாயம் கண்டுள்ளார். இந்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், குறித்த நபர் குற்றவாளி என உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2007 முதல் 2018 வரையில் Guerly Estimé என்ற நபர், தமக்கு 12 பிள்ளைகள் இருப்பதாக கூறி சுமார் 144,821 டொலர் ஆதாயம் பெற்றுள்ளார்.
இந்த வழக்கில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட நிலையில் மாண்ட்ரீல் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு நிபந்தனை சிறைத்தண்டனையும் மூன்று ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பும் விதித்துள்ளது.
மட்டுமின்றி, இதுவரை ஏமாற்றி ஆதாயம் பெற்ற மொத்த தொகையையும் திருப்பி செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற முறைகேடில் 2020 ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் மாதம் வரையில் 36 பேர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, சுமார் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.