கனடாவின் மொன்றியலில் மக்கள் தொகை வீழ்ச்சி! ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவின் முன்னணி நகரங்களில் ஒன்றான மொன்றியலில் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
'அப்சர்வேட்டரி கிராண்ட் மொன்றியல்' அமைப்பின் அண்மைய ஆய்வின்படி, குறைந்த அளவிலான குடியேற்றம் மற்றும் வேகமாக வயதாகி வரும் மக்கள் தொகையே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொராண்டோ, வான்கூவர் போன்ற பிற பெரிய நகரங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்லும் நிலையில், மொன்றியல் மட்டும் இந்த எதிர்மறையான போக்கை எதிர்கொள்கிறது.
2025ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 43 லட்சமாக இருந்த மொன்றியலின் மக்கள் தொகை, வரும் 2050ஆம் ஆண்டிற்குள் 1.3 சதவீதம் வரை குறையக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக, அதிகப்படியான குடியேற்றம் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை காரணமாக டொராண்டோவின் மக்கள் தொகை 2050க்குள் 14.6 சதவீதமும், வான்கூவரின் மக்கள் தொகை 21.9 சதவீதமும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக மொன்றியலில் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 2.9 சதவீதம் உயர்ந்துள்ளது.
மக்கள் தொகையில் உழைக்கும் வயதினரை விட, அவர்களைச் சார்ந்து வாழும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத்தான் 'சார்பு விகிதம்' என்கிறோம்.
மொன்றியலில் 2006 முதல் 2025 வரை, உழைக்கும் மக்களின் வளர்ச்சியை விட (0.7%), முதியவர்கள் போன்ற சார்ந்து வாழ்பவர்களின் வளர்ச்சி (1.4%) இரட்டிப்பாக இருந்துள்ளது.
இதன் காரணமாக, 2050ஆம் ஆண்டிற்குள் மொன்றியலின் சார்பு விகிதம் 74.7 சதவீதமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது டொராண்டோ (64%) மற்றும் வான்கூவர் (61%) நகரங்களை விட மிக அதிகமாகும்.
இந்த நிலவரம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புச் சந்தை மற்றும் பொது நிதித்துறைக்கு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கும். வரி செலுத்துவோரின் சுமை அதிகரிக்கும். மேலும், வயதானவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவ வசதிகளுக்கு அருகிலுள்ள சிறிய ரக வீடுகளுக்கான தேவையும் வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்.