அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு: கனடாவுக்குள் நுழைய முயலும் ஹெய்ட்டி அகதிகள் !
ஹெய்ட்டி மற்றும் சிரியா போன்ற நாடுகளில் நிலவும் வன்முறை மற்றும் இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பித்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த புலம்பெயர்ந்தோருக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவிலிருந்து ஹெய்ட்டி நாட்டு அகதிகள் புதிய அலையாகக் கனடாவுக்குள் நுழையக்கூடும் என்று மாண்ட்ரியலைச் சேர்ந்த அகதிகள் நல ஆதரவாளர் பிரான்ட்ஸ் ஆண்ட்ரே தெரிவித்துள்ளார்.
கொமிட்டே டி ஆக்சன் டெஸ் பெர்சன்ஸ் சான்ஸ் ஸ்டேட்டஸ்’ அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஆண்ட்ரே இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

நாங்கள் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் கூட, மக்கள் கனடாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பால் லட்சக்கணக்கான மக்கள் தடுத்து வைக்கப்படும் அல்லது நாடுகடத்தப்படும் அபாயத்தில் உள்ளதால், அவர்கள் வடக்கை (கனடாவை) நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அமெரிக்காவில் 'தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்து' திட்டத்தின் கீழ் தங்கியிருந்த சுமார் 3,50,000 ஹெய்ட்டி மக்களையும், 6,000 சிரிய மக்களையும் நேரடியாகப் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 1990-ல் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் பாதுகாப்பை டிரம்ப் நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கனடாவில் நெருங்கிய உறவினர்களைக் கொண்ட சில அகதிகள் மட்டுமே இங்கு தங்கி தஞ்சம் கோர அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், மற்றவர்கள் மீண்டும் அமெரிக்க அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டு, அங்கிருந்து அவர்கள் ஆபத்து நிறைந்த தங்கள் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் அபாயம் உள்ளது.