கனடிய பொருளாதாரம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்
கனடாவில் நிலவும் கடும் கடன் சுமை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக, கடன் தீர்வு விண்ணப்பங்கள் மற்றும் வங்குரோத்து நிலைப் பிரகடனங்கள் (Bankruptcies) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன.
கனடாவின் வங்குரோத்து கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 37,121 கனடியர்கள் வங்குரோத்து நிலை அல்லது கடன் தீர்வு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.
இது 2009 உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 8.5% அதிகரிப்பு ஆகும்.
கனடாவில் சராசரியாக ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 17 பேர் வங்குரோத்து நிலைக்கு விண்ணப்பிக்கின்றனர்.
பொருளாதார நிபுணர்கள் மற்றும் கடன் தீர்வு நிபுணர் ஆண்ட்ரே போல்டுக் இது குறித்துக் கூறுகையில், கனடியக் குடும்பங்கள் 'G7' நாடுகளிலேயே மிக அதிக அளவிலான கடன் சுமையைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
பாதிக்கும் மேற்பட்ட கனடியக் குடும்பங்கள் தங்களின் அடுத்த மாத வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றன. இதனால் ஏதேனும் எதிர்பாராத செலவு வரும்போது அவர்கள் கடனைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குறைந்த வட்டியில் கடன் வாங்கியவர்கள், தற்போது முன்பை விட மிக அதிக வட்டியில் தங்கள் கடனைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
உணவு, எரிபொருள் மற்றும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. கனடாவின் பொருளாதார இயந்திரமாகக் கருதப்படும் ஒன்ராறியோ மாகாணம் இந்த நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோவில் மட்டும் 13,913 பேர் வங்குரோத்து நிலைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 14.7% அதிகமாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், புதிய வரி விதிப்புகள் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை ஒன்ராறியோவின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதாக நிபுணர் டக் ஹோயஸ் எச்சரிக்கிறார்.
நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் உரிமம் பெற்ற வங்குரோத்து நிபுணர்களை அணுகி ஆலோசனைகளைப் பெறலாம். 80% மக்கள் முழுமையாக வங்குரோத்து நிலையை அறிவிப்பதை விட, 'கடன் தீர்வு விண்ணப்பம்' முறையையே தேர்வு செய்கின்றனர்.
இதன் மூலம் சொத்துக்களை இழக்காமல், குறைந்த மாதாந்திரத் தவணையில் வட்டியில்லாமல் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும்.
வாகனக் கடன் மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து, கடனைச் சரியான அளவில் பராமரிப்பதே இப்போதைய சூழலில் பாதுகாப்பானது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.