மகன், கணவனை இழந்தேன்... நீதி கிடைக்கவில்லை: கதறும் கனேடிய பெண்மணி
ஒன்ராறியோவின் Barrie பகுதியில் கணவன் மற்றும் மகனை கத்திக்குத்து சம்பவத்தில் இழந்த பெண்மணி ஒருவர் தமக்கு நீதி கிடைக்கவில்லை என கதறியுள்ளார்.
குறித்த வழக்கில் 28 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதுடன், தண்டனைக் காலத்தின் முதல் 18 ஆண்டுகளில் அவருக்கு பிணை அளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பை வெளியிட்ட நீதிபதி, இச்சம்பவம் மிருகத்தனமானது மட்டுமல்ல கொடுமையானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017 பிப்ரவரி 8ம் திகதி Dyrrin Daley என்பவர் 51 வயதான ஜேம்ஸ் மற்றும் அவரது மகன் 19 வயதான நிக் ஆகியோரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
வியாழக்கிழமை தீர்ப்பு வெளியான நிலையில், இந்த கொடூர குற்றத்திற்கு ஆயுள் தண்டனை போதாது எனவும், தமக்கு கிடைத்துள்ள நீதியாக இதை கருத முடியாது எனவும் நிக்கின் தாயார் Rose Beaton தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரையான அனுபவங்கள் தம்மை பெருமளவு மாற்றியுள்ளது எனவும், அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்பது தான் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கு விசாரணையின் அனைத்து கட்டங்களிலும், தற்காப்புக்காகவே கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் Dyrrin Daley. தம்மை ஜேம்ஸ் தாக்கவந்த நிலையில், செய்வதறியாது கொடூரமாக நடந்து கொண்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2017ல் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் கைதான பின்னர் Dyrrin Daley பொலிஸ் காவலிலேயே இருந்து வருகிறார்.
தற்போது தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், 2035ம் ஆண்டில், அவருக்கு 42 வயதாகும் போது பிணையில் விடுவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.