பிரான்சில் பிள்ளைகளை பயணக் கைதிகளாக்கிய தாயார்; வீட்டுக்கும் தீ வைப்பு
பாரிஸில் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கத்தியால் அச்சுறுத்தியுள்ளதுடன் தனது வீட்டினையும் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கடந்த வாரம் பாரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாவது தளத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளை திடீரென அச்சுறுத்தத் தொடங்கியுள்ளார்.
அவர்களை பணய கைதிகளைப் போன்று வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்துக்கொண்டு அவர்களை கத்தியால் மிரட்டியதுடன் பிள்ளைகள் மூவரின் கை மணிக்கட்டு பகுதியில் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன், வீட்டுக்கும் நெருப்பு வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கட்டிடத்தில் வசித்த சிலர் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கினர். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளையும் மீட்டுள்ளனர்.
அதேவேளை மிக ஆக்ரோஷமாக நடந்துகொண்ட தாயாரையும் மீட்டுள்ள நிலையில், அப்பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மொத்தமாக 136 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த நிலையில் தாயின் தாக்குதலினால் காயமடைந்த 3 பிள்ளைகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.