மகளைப் போல மாறுவேடம் பூண்டு கொண்டு பாடசாலை சென்ற தாயார் ; காணொளியால் சிக்கினார்
அமெரிக்காவில் தனது 13 வயது மகளைப் போல மாறுவேடம் பூண்டு கொண்டு பாடசாலை சென்ற 30 வயதான தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். மாருவேடத்தில் தாயார் ஒருநாள் வகுப்பறையில் கழித்தார். ஆசிரியர்கள் யாரும் அடையாளம் காணவில்லை. இந்த சம்பவத்தை அவர் யூடியூப் மூலம் பகிரங்கப்படுத்திய பின்னரே, அவர் ஆள்மாறாட்டம் செய்தமை தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸின் சான் எலிசாரியோவில் உள்ள பாடசாலையில் இந்த சம்பவம் நடந்தது. முப்பது வயதான கேசி கார்சியா எனும் அந்த தாய், பாடசாலை அதிபரை நேருக்கு நேர் சந்தித்துள்ளதுடன் வகுப்பில் அனைத்து பாட ஆசிரியர்களும் வந்தது சென்றனர். எனினும் யாரும் அவரை அடையாளம் காணவில்லை.மதியம், பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் உணவருந்தினார்.
அதன்பின்னர் வழக்கம் போல பாடசாலையை முடித்து விட்டு, வீடு திரும்பிய பின்னர், நடந்தவை அனைத்தையும் யூடியூப்பில் வெளியிட்டார். அதோடு அமெரிக்க பாடசாலைகளில் இடம்பெறும் துப்பாக்கிச்சூடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாடசாலைக்கு மாறுவேடமிட்டு சென்றதாக தெரிவித்தார்.
“பாடசாலை நிலைமை மிகவும் கவலையாக இருந்தது, நான் யார் என்பதில் கூட அவர்கள் கவனம் செலுத்தவில்லை பாடசாலைகளில் துப்பாக்கிச்சூடுகளை நிறுத்த வேண்டுமென்பதற்காக இதை செய்தேன். எங்கள் பாடசாலைகளில் சிறந்த பாதுகாப்பு தேவை என்று நான் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன், இதை நான் நிரூபிக்க முயற்சித்தேன் எனவும் வீடியோவில் தெரிவித்தார்.
எனினும், அவரது நடவடிக்கை குற்றவியல் நடவடிக்கையென கூறி, கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் அவர் மீது குற்றவியல் அத்துமீறல் மற்றும் அரசாங்க பதிவுகளை சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.