பிரித்தானியாவில் சொத்தை பாதுகாப்பதாகக் கூறி 115 பேரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி!
பிரித்தானியாவில், குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நம்பவைத்து முதியவர்களிடம் இருந்து சொத்துகளை அபகரித்த மோசடி வழக்கில், சந்தேக நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 115 பேரை ஏமாற்றி 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்திய நபருக்கு 8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத் தண்டனை
80 வயதான டொனால்ட் மேத்யூஸ் (Donald Matthews), 2008 ஆம் ஆண்டு தனது குடும்பச் சொத்துகளை பாதுகாக்கும் நோக்கில், யூனிவர்சல் வெல்த் பிரிசர்வேஷன் (Universal Wealth Preservation – UWP) என்ற நிறுவனத்திற்கு தனது வீட்டின் உரிமையை மாற்றி வழங்கினார்.
அந்த நிறுவனம் அவரது சொத்துகள் பாதுகாப்பாக இருக்கும் என உறுதியளித்திருந்தது.
டொனால்ட் மேத்யூஸ் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த பின்னர், அந்த நிறுவனம் சஃபோக் (Suffolk) பகுதியில் இருந்த அவரது வீட்டை பல இலட்சம் பவுண்டுகளுக்கு விற்றுவிட்டு, அதிலிருந்து கிடைத்த பணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எந்தப் பகுதியையும் வழங்கவில்லை.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், UWP நிறுவனத்தின் தலைவரான 59 வயதான ஸ்டீவன் லாங் (Steven Long), டொனால்ட் மேத்யூஸை மட்டுமல்லாமல் இதேபோன்ற முறையில் மேலும் 114 பேரையும் ஏமாற்றி, மொத்தமாக 11 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிக நிதி மோசடி செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, லண்டனிலுள்ள சவுத்வர்க் கிரவுன் நீதிமன்றம் (Southwark Crown Court) வெள்ளிக்கிழமை அவருக்கு 8 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது.
டொனால்ட் மேத்யூஸின் மகன் பால் மேத்யூஸ், தனது தந்தையின் நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி செய்த ஸ்டீவன் லாஙின் செயல் ,மிகவும் அருவருப்பானது, எனக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, சொத்துகளை பாதுகாப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் நிதி மோசடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.