துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள மம்மி!
எகிப்து நாட்டின் சக்கரா பகுதியில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மம்மி துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மம்மி எகிப்து நாட்டு அரங்கில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது.
துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி தொடங்க இன்னும் ஒரே வாரம் மட்டும் உள்ள நிலையில் பல்வேறு அரங்குகளில் பார்வையாளர்களை கவரும் வகையிலான வேலைபாடுகள் இறுதிகட்டத்தை அடைந்து வருகிறது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த அரங்குகளில் அந்தந்த நாட்டின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நினைவுச்சின்னங்கள் பார்வையாளர்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது.இதில் எகிப்து நாட்டின் அரங்கில் வைக்கப்படுவதற்காக சமீபத்தில் அந்நாட்டின் சக்கரா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மம்மி ஒன்று துபாய்க்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
இந்த மம்மி பழங்காலத்தில் வாழ்ந்த சாம்திக் என்ற மதகுருவுடையது ஆகும். மம்மி வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியில் (காபின்) பெடியோசிரின் மகன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டு அரங்கில்...
காபின் எனப்படும் இந்த சவப்பெட்டியானது பெரிய நகை போன்ற தோற்றத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த நகை ஒரு பெரிய பருந்தின் தலையுடன் உள்ளதுபோல் வரையப்பட்டுள்ளது.
எகிப்து மக்கள் வணங்கிய வானத்தின் தெய்வமான நட் மற்றும் தனது 2 சிறகுகளை விரித்தது போல் காட்சியளிக்கும் மாட் என்ற நீதியின் தெய்வக் ஆகியவைகளின் சித்திரங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த பெட்டியின் மையப்பகுதி அந்த காலகட்டத்தின் மதத்தினர் பயன்படுத்திய மந்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. எகிப்து மதகுருவின் மம்மியை காட்சிப்படுத்த பண்டைய மன்னர் துட்டன்காமூன் மற்றும் அவரது சகாக்கள் போன்று வேடமிட்ட குழுவினர் துபாய் வந்துள்ளனர்.
சிறப்பு காட்சியாக அந்த மன்னரின் தங்க முகமூடியும் உண்மையில் அணிந்து காட்டப்பட உள்ளது. குறிப்பாக அந்த மன்னனின் சிம்மாசனமும் இங்கு இடம்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும். எகிப்து நாட்டு அரங்கில் இந்த மம்மி மற்றும் மன்னர் வாழ்ந்த காலகட்டத்தை நினைவூட்டும் வகையிலான நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.