உலகை உலுக்கிய ஜார்ஜ் பிளாய்டு கொலை; தண்டனையை அறிவித்த நீதிமன்றம்!
உலகை உலுக்கிய கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு (George Floyd) கொல்லப்பட்ட வழக்கில், பொலிஸ் அதிகாரிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவின் மினியாபோலிசில் கடந்த ஆண்டும் மே மாதம் 25-ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்டு (46) (George Floyd)என்ற கறுப்பினத்தவர், கடை ஒன்றில் கள்ள நோட்டு கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதன் பின், அவரின் கைகளை பின்பக்கமாக கட்டி, கீழே வீழ்த்திய ஒரு பொலிஸ் அதிகாரி, பிளாய்டின் கழுத்தின் மீது, தன் கால் முட்டிகளால் நெருக்கியதால், ஜார்பிளாய்ட் மூச்சுவிட முடியாமல், உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான, வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரி, டெரக் சாவ்வின்(45) உள்ளிட்டோர் பணி நீக்கம் செய்யப் பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, 12 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த ஏப்ரலில் நடந்த விசாரணையின் போது டெரக் சாவ்வின் மீது, மூன்று விதமான கொலை குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு இருந்தது.
அந்த மூன்றிலும் அவர் குற்றவாளி என்பதை அமர்வு உறுதி செய்த நிலையில் வழக்கின் நேற்று தண்டனை விவரம் வெளியானது. இதில், டெரக் சாவ்விற்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஜார்ஜ் பிளாய்டு குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.
ஆனால், இணையவாசிகள் பலர் இந்த தண்டனை மிகவும் குறைவு, இதே போன்று சில தவறுகளில் ஈடுபட்ட கருப்பினத்தவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேல் எல்லாம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.