கனடாவில் இந்திய வம்சாவளி நபரின் கொடுஞ்செயல்: இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு
ஒன்ராறியோவின் பிராம்ப்டனில் மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய சம்பவமானது 2018 ஜனவரி மாதம் 12ம் திகதி இரவு 10.45 மணிக்கு நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்ற பொலிசார், குடியிருப்பினுள் கொடூரமாக தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் இரு சடலங்களை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஒருவர் 32 வயதான பல்ஜித் தண்டி எனவும், இன்னொருவர் தண்டியின் தாயார் 60 வயதான அவ்தார் கவுர் எனவும் அடையாளம் காணப்பட்டது.
மேலும், இருவரும் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தண்டியின் கணவர் Dalwinder Singh குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது இரு பிரிவுகளில் முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டது.
வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்துள்ள நிலையில், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், முதல் 25 ஆண்டுகளுக்கு பிணை அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.