ஈரான் போர்: எரிபொருள் தொடர்பில் கனடாவின் உதவியை நாடும் நாடுகள்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால், எதிர்பார்த்ததுபோலவே கச்சா எண்ணெய், எரிபொருள் விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.
பொதுவாகவே, போர் தொடங்கினால், அந்தப் போர் நேரடியாக போரில் சம்பந்தப்பட்டுள்ள நாடுகளை மட்டுமின்றி மற்ற நாடுகளையும் பாதிக்கும். குறிப்பாக, எண்ணெய் விலை உயரும். அப்படியிருக்கும்போது, மத்திய கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள மோதல் எண்ணெய் மற்றும் எரிபொருள் விலையை எந்த அளவுக்கு பாதிக்கும்!
அதாவது, உலகின் மொத்த எண்ணெயில் 20 சதவிகிதம் ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாகத்தான் கொண்டுவரப்படுகிறது.

இந்த ஹோர்மூஸ் ஜலசந்தி, ஈரான் மற்றும் ஓமான் நீர்ப்பரப்பில் அமைந்துள்ளது.
ஆக, ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், ஏதாவது கப்பல் அந்த பகுதிக்குள் நுழைந்தால் அதை தீவைத்துக் கொளுத்திவிடுவோம் என்றும் எச்சரித்துள்ளது.
ஆக, ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் கப்பல்கள் அனுமதிக்கப்படவில்லை என்றால், ஓரிரு நாட்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
ஆனால், அதுவே ஐந்து நாட்கள், ஒரு வாரம் என நீடித்தால், ஹோர்மூஸ் ஜலசந்தியின் இருபக்கங்களிலும் கப்பல்கள் காத்து நிற்க, உண்மையாகவே அது உலகின் பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தத் துவங்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், எண்ணெய் மற்றும் எரிபொருளுக்காக கனடாவின் உதவியை சில நாடுகள் நாடியுள்ளதாக கனடாவின் எரிசக்தித்துறை அமைச்சரான டிம் (Tim Hodgson) தெரிவித்துள்ளார்.

ஈரான் போரால் ஏற்பட்டுவரும் எண்ணெய் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய, கனடாவால் உதவ முடியுமா என்று கேட்டு பல்வேறு நாடுகளிலிருந்து தனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருப்பதாக டிம் தெரிவித்துள்ளார்.
மேலும், திடீரென இப்படி ஒரு கோரிக்கை வந்துள்ளதால், அதற்கு பதிலளிக்க கனேடிய எண்ணெய் மற்றும் எரிபொருள் உற்பத்தியாளர்களுக்கு சிறிது கால அவகாசம் தேவை என்று கூறியுள்ள அவர், திடீரென எண்ணெய் அல்லது எரிபொருள் தயாரிப்பை அதிகரிக்க இயலாது என்கிறார்.
கனடா, குறிப்பாக, கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் எண்ணெய் வளம் மிக்க மாகாணம் என்பதை பலரும் அறிந்திருக்கக் கூடும்.
உலகிலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில், கனடா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள நாடு என அழைக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.