கனடாவில் வாழவே பயமாக இருக்கிறது: பீதியில் இந்திய இளைஞர்கள்
கனடாவின் நோவா ஸ்கோடியாவில் இந்திய இளைஞர் படுகொலையால், நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்வதாக இந்திய கனேடிய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நோவா ஸ்கோடியாவின் Truro பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 23 வயதான இந்திய இளைஞர் ஞாயிறன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் Truro பகுதி பொலிசார் வெளியிட்ட தகவலில், குறித்த இளைஞரின் மரணம் படுகொலை என்றே சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விவகாரத்தால் அப்பகுதி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனவும் பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிடவில்லை என்றாலும், கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் பிரப்ஜோத் சிங் கத்ரி எனவும், கடந்த 2017ல் கல்வி தொடர்பில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்தார் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டாக்சி சாரதியாக அவர் பணியாற்றி வந்துள்ளார். பழகுவதற்கு இனிமையான நபர் என குறிப்பிட்டுள்ள குமார்தீப் என்பவர், நண்பனின் கொலை சம்பவத்தால் கனடாவில் வாழவே பயமாக இருக்கிறது என்றார்.
மிக குறைந்த எண்ணிக்கையிலான இந்திய சமூகம், எப்போதும் சிக்கலில் இருந்து விடுபட்டு அமைதியான வாழ்க்கை வாழவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். கனடாவுக்காகவும் சேர்த்து தான் நாங்கள் உழைக்கிறோம், ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அச்சுறுத்தல் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
படுகொலை சம்பவத்திற்கு பிறகு, பிரப்ஜோத் சிங் கத்ரி அறையில் இருந்து எதுவுமே கொள்ளையிடப்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் பயன்படுத்திய மொபைல்போன் கூட திருடு போகவில்லை என்றார் இன்னொரு நண்பரான அகம்பால் சிங்.
தனக்கு அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகமாக பேச விரும்பாதவர் பிரப்ஜோத் சிங் கத்ரி. உண்மையில் இது வெறுப்பால் ஏற்பட்ட படுகொலை என்றே தாம் கருதுவதாக அகம்பால் சிங் தெரிவித்துள்ளார்.
பிரப்ஜோத் சிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது வேலைக்கான விசாவில் இருப்பதாகவும் கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க இருந்ததாகவும் அகம்பால் சிங் கூறியுள்ளார்.
மேலும், நாங்கள் ஒரு நல்ல எதிர்காலத்திற்காக இந்த நாட்டிற்கு வந்திருகிறோம், தற்போதைய சூழலில் நாங்கள் பாதுகாப்பாக இல்லை. என்னால் தூங்கக்கூட முடியவில்லை என்றார் அகம்பால் சிங் கண்கலங்கியபடி.