சீனாவில் மீளப்பெறப்படும் 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள்
மின்சார வாகனங்களின் நவீன வடிவமைப்பின் முக்கிய அடையாளமாக மாறியுள்ள மறைவு கதவுக் கைப்பிடிகள் தற்போது சீனாவின் மிகப்பெரிய வாகன மீளப்பெறும் நடவடிக்கைக்கு காரணமாகியுள்ளன.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 29.8 இலட்சம் டெஸ்லா வாகனங்கள் உட்பட மொத்தம் 40 இலட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இந்த நடவடிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா, ஸிபஙெ், ஸியோமி மற்றும் ஜீலி உள்ளிட்ட நிறுவனங்களின் சில மின்சார வாகனங்கள் இதில் அடங்குகின்றன.

விபத்து அல்லது அவசரநிலை ஏற்படும் போது, வாகனத்தின் உட்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கதவுக் கைப்பிடிகளை கண்டுபிடித்து திறப்பது கடினமாக இருக்கலாம் என்ற பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன.
குறிப்பாக, கடுமையான மோதலின் காரணமாக வாகனத்தின் குறைந்த மின்னழுத்த மின்சார அமைப்பு செயலிழந்தால், பயணிகள் விரைவாக வாகனத்திலிருந்து வெளியேறுவதற்கு இது தடையாக இருக்கலாம் என்றும், வெளியில் இருந்து மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்றும் டெஸ்லா தெரிவித்துள்ளது.
மீளப்பெறப்படும் வாகனங்களில் உட்புறக் கதவுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை ஒட்டிகள் பொருத்தப்படுவதுடன், விபத்து ஏற்பட்டால் வாகனத்தின் ஜன்னல்கள் தானாகக் கீழிறங்கும் வகையில் மென்பொருள் புதுப்பிப்பு வழங்கப்பட உள்ளது.
சீனாவில் ஸியோமி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் தொடர்பான இரண்டு உயிரிழப்பு விபத்துகளுக்குப் பின்னரும் இந்த கதவுக் கைப்பிடி வடிவமைப்பு தொடர்பான பாதுகாப்பு கேள்விகள் தீவிரமடைந்துள்ளன.
அந்த சம்பவங்களில் மின்சார அமைப்பு செயலிழந்ததால் கதவுகளைத் திறக்க முடியாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த மீளப்பெறும் நடவடிக்கை சீனாவுக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட இதே வகை வாகனங்களுக்கும் பொருந்துமா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.