தோட்ட வேலை செய்த கனேடியரின் உடலில் ஊர்ந்த பூச்சிகள்... கவலையை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
கனடாவில் தோட்டவேலை செய்துகொண்டிருந்த ஒருவர் தன் மீது ஊர்ந்துகொண்டிருந்த ஒரு பூச்சியைக் கண்டு திடுக்கிட்டார்.
45 ஆண்டுகளாக St. George பகுதியில் வாழ்ந்து வருபவர் Joe Hunt. அவர் பொதுவாக எந்த பூச்சியைக் கண்டும் அருவருப்படைவதில்லை. ஆனால், அன்று தன் மீது ஒரு பூச்சி ஊர்வதை அவர் கவனித்தபோது ஒரு வித்தியாசமான உணர்வு அவருக்கு ஏற்பட்டது
அது உண்ணி என்னும் ஒருவகை பூச்சி. பொதுவாக அவை நாய்கள் மீது காணப்படும். ஆனால், தன் கை மீது ஒரு உண்ணி ஊர்வதைக் கண்ட Joe, பிறகுதான் தன் உடல் முழுவதும் பல உண்ணிகள் ஊர்வதைக் கவனித்தார். கிட்டத்தட்ட 20 முதல் 30 உண்ணிகள் அவர் உடலில் ஊர்ந்துகொண்டிருந்ததுடன், அவை அவரது இரத்தத்தைக் குடித்துக்கொண்டிருப்பதையும் அவர் கவனித்தபோதுதான் முதன்முறையாக அவருக்கு அருவருப்பான ஒரு உணர்வு ஏற்பட்டது.
அதாவது, கனடாவில் குளிர்காலம் மிதமானதாகவும், கோடை ஈரப்பதமாகவும் இருந்தது. இந்த உண்ணிகளுக்கு ஈரம் என்றால் பிடிக்கும். ஆக, இந்த உண்ணிகள் சென்ற கோடையில் பரபரப்பாக இருந்துள்ளன, நிறைய இரத்தம் குடித்துள்ளன. எக்கச்சக்கமான முட்டைகளைப் போட்டிருக்கின்றன.
விடயம் என்னவென்றால், இன்னமும் நிலைமை மோசமாகப்போகிறது...
ஆம், இலையுதிர்காலம் நெருங்குவதையடுத்து இந்த உண்ணிகள் இன்னமும் வேகமாக வெளியே வரபோகின்றன. குளிர்காலம் வரும் முன் நிறைய இரத்தம் குடித்து வைத்துக்கொள்ளலாம் என தங்கள் கடைசி இரத்த வேட்டையில் அவை இறங்கப்போகின்றன. அதாவது, இன்னமும் அதிக உண்ணிகளை மக்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள்.
இந்த உண்ணிகள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய்களைப் பரப்பக்கூடியவையாகும்.
குறிப்பாக, Lyme disease என்றொரு நோயை அவை உருவாக்கும்.
எனவே, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மருத்துவர்கள் மக்களுக்கு ஆலோசனை கூறுகிறார்கள். பூச்சிகளை விரட்டும் ஸ்பிரேயை பயன்படுத்துவதுடன், வெளியே சென்று வந்ததும் உடலில் ஏதாவது உண்ணிகள் ஒட்டியிருக்கிறதா என்று கவனித்து, அவற்றை அகற்றிவிட்டு வீட்டுக்குள் செல்லுமாறு மக்களை அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.