பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து புதிய சர்ச்சை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடியாலா சிறையில் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் தனது வலது கண்ணின் பார்வையில் 85 சதவீதத்தை இழந்துள்ளதாக நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி சல்மான் சஃப்தார் சமர்ப்பித்துள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட சல்மான் சஃப்தார் சிறைக்குச் சென்று இம்ரான் கானை நேரில் சந்தித்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் உட்பட ஒருசில சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.

2025 ஒக்டோபர் வரை இரு கண்களிலும் சீரான பார்வை (6 x 6) இருந்துள்ளது. அதன் பிறகு மங்கலான பார்வை குறித்து இம்ரான் கான் பலமுறை முறையிட்டும் சிறை அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை.
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், வலது கண்ணில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பரிசோதித்த நிபுணர்கள், கண்ணில் இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
தற்போது தீவிர சிகிச்சைக்குப் பின் வெறும் 15 சதவீத பார்வை மட்டுமே அவருக்கு எஞ்சியுள்ளது. இம்ரான் கானைச் சந்தித்த போது அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டதாகவும், அவரது கண்கள் எப்போதும் கண்ணீரால் நிறைந்திருந்ததாகவும் சல்மான் சஃப்தார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
73 வயதாகும் இம்ரான் கானுக்குத் தேவையான வழக்கமான இரத்தப் பரிசோதனைகள் கூட நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பல் மருத்துவப் பரிசோதனைக்குக் கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் அவரது சகோதரிகள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அண்மையில் சிறை அதிகாரி மாற்றப்பட்ட பின்னரே, வாரத்திற்கு ஒருமுறை 30 நிமிடங்கள் தனது மனைவியைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முழுவதிலும் தனது மகன்களுடன் வெறும் இரண்டு முறை மட்டுமே அவர் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளார் என சல்மான் சஃப்தார் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அவருக்கு உடனடியாகச் சிறப்பு கண் மருத்துவ நிபுணர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என சல்மான் சஃப்தார் பரிந்துரைத்துள்ளார்.