சிட்னி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள்
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பொண்டாய் கடற்கரையில் கடந்த 14 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணையில் துப்பாக்கிதாரிகள் பல மாதங்களாகத் திட்டமிட்டு பயிற்சியில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்குவதற்கு முன்னதாக மக்கள் கூட்டத்தை நோக்கி வெடிபொருட்களை வீசியுள்ளனர். இதில் அலுமினிய பைப் குண்டுகள் மற்றும் டென்னிஸ் பந்து குண்டுகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவை வெடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அத்துடன், தாக்குதலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, துப்பாக்கிதாரிகளான தந்தை மற்றும் மகன் ஆகியோர் நியூ சவுத் வேல்ஸின் கிராமப்புறப் பகுதி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தும் பயிற்சியில் ஈடுபட்ட காணொளிகள் அவர்களது கைபேசிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

அதேநேரம், தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, கடந்த 12 ஆம் திகதி அவர்கள் பொண்டாய் கடற்கரைக்குச் சென்று, எந்த இடத்திலிருந்து தாக்குதலை நடத்துவது என்பது குறித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ISIS அமைப்பின் கொடிக்கு முன்னால் அமர்ந்து, தமது தாக்குதலுக்கான காரணங்களை விளக்கிக் காணொளியொன்றை பதிவு செய்துள்ளனர். இதில் அவர்கள் யூத அமைப்புகளுக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலின் போது 50 வயதான தந்தை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், 24 வயதான அவரது மகன் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதக் குற்றம் உட்பட 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த செய்தித் தணிக்கை உத்தரவு நேற்று (22) நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.